குமரியில் கொட்டும் கனமழை - பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேற்றம்
கன்னியாகுமரி: குமரியில் கொட்டி வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.88 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,466 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டது.
நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் பெய்த மழையினால் கோட்டார் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கொட்டாரம், இரணியல், ஆணைக்கிடங்கு, மயிலாடி, கன்னிமார், ஆரல்வாய்மொழி பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.
காலை 6 மணி வரை இடைவிடாது கொட்டிய கனமழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. வீடுகளையும் மழை நீர் சூழ்ந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்த கனமழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
அருவியில் குளிக்கத் தடை
கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள்
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.88 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,466 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 651 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 305 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வீடுகள் இடிந்தன
மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளது. நெற்பயிர்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளன. சேத மதிப்பை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மழைக்கு 40 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
உற்பத்தி பாதிப்பு
தொடர் மழையினால் தோவாளை, செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, குளச்சல் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும், குலசேகரம், கீரிப்பாறை, அருமனை பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.சாமித்தோப்பு, பால்குளம் பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பேச்சிப்பாறை-58 மி.மீ, பெருஞ்சாணி-39 மி.மீ சிற்றாறு-1-80 மி.மீ, சிற்றாறு-2- 57.4 மி.மீ. மாம்பழத்துறையாறு-47மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.