தமிழகம் முழுவதும் பரவலாக மழை.. சென்னையில் காலையில் 'லைட்'டா!
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று முழுவதும் ஜில் ஜில் கூல் கூல் என காற்று வீசிய நிலையி்ல் நள்ளிரவுக்கு மேல் லேசாக மழை பெய்து விட்டுப் போனது.
கத்திரி வெயில் முடிந்து விட்டது. கோடை காலமும் முடிவை நோக்க நெருங்கி வருகிறது. தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தொடங்கி விறுவிறுப்பாக உள்ளது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நாமக்கல், கோவை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சற்று பலமான மழை பெய்துள்ளது.
வெப்ப பூமியான ராமநாதபுரம், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மாலையில் மழை கொட்டியது. பூங்குளம் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், சாயல்குடி -தஞ்சாவூர் இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையிலும்
சென்னையிலும் மழை மெல்லத் தலை காட்டி விட்டுச் சென்றது. நேற்று பகல் முழுவதும் நல்ல காற்று வீசியது. இதனால் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் மழை வரவில்லை. மாறாக நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை லேசான மழை பெய்தது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை காணப்பட்டது.