நெல்லை தூத்துக்குடியில் கனமழை... பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் .. தவிக்கும் மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
லட்சத்தீவு அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குமரி, நெல்லை, தூத்துகுடியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடிமாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக ஓய்ந்திருந்த பருவமழை மீண்டும் தீவிரமடைய துவங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக மழை இல்லாமல் இருந்த தூத்துக்குடியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது.
இன்று காலை முதல் தூத்துக்குடி , முள்ளக்காடு, முத்தையாபுரம், புதுக்கோட்டை, மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாத காரணத்தால் தான், காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளம் நிரம்பி, 24 கண் மடைகளும் திறந்து விடப்பட்டன. தொடர்மழை காரணமாக ஏற்பட்ட குளத்தை நோக்கி செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கால்வாயில் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
இதுதொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப் போவதாக ஸ்ரீவைகுண்டம் அணை நீர்பிடிப்பு குளங்கள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நெல்லையில் விடிய விடிய கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடித்துள்ளதால் வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.