ஜில்லுன்னு வானம்.. சென்னையில் பல பகுதிகளில் லேசான மழை.. மக்கள் மகிழ்ச்சி !
சென்னையில் பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் மேகம் சூழ்ந்ததால் குளிர்ச்சி நிலவியது. மேலும் வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை: சென்னையில் பல இடங்களில் வானம் நேற்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. வெயில் வதைத்து வந்த நிலையில் மழை பெய்தததால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்தாலும் தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் மேகம் சூழ்ந்ததால் குளிர்ச்சி நிலவுகிறது.
இந்நிலையில் வடபழனி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு லேசான மழை பெய்தது. அடையார், வேளச்சேரி, கோட்டூர்புரம் , நந்தனம் ஆகிய இடங்களில் இடி மின்னலுடம் மழை கொட்டியது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத், சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாவட்டத்தின் வேப்பந்தட்டை, தழுதாழை, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பகலில் வெயில் வதைத்து வந்த நிலையில் மழை பெய்தது மக்களுக்கு சற்று ஆறுதல் தந்துள்ளது.