வட மாவட்டங்களில் மழை குறையும்.. ஆனால் தென் மாவட்டங்களில் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளது. அதேசமயம், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் வட பகுதியில் மழை அளவு சற்று குறையும். ஆனால் தென் மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக நல்ல மழை பெய்தது.
சென்னையில் தொடர்ந்து விடாமல் 4 நாட்கள் விட்டு விட்டு கன மழை கொட்டித் தீர்த்தது. ஆனால் நேற்று மாலைக்கு மேல் மழை நின்று போய் விட்டது. இரவில் மழை இல்லை. இன்று காலையில் நல்ல வெயில் அடித்தது. தற்போது வானம் மேகமூட்டமாக, லேசான வெயிலுடன் காணப்படுகிறது
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நீலகிரி, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் மழை அதிகம் பெய்துள்ளது.
இந்த நிலையி்ல் மன்னார் வளைகுடா பகுதியி்ல நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் வட மாவட்டங்களில் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.