சென்னையில் ஆங்காங்கே தூறல்.. பல இடங்களில் மேகமூட்டம்!
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ள நிலையில் சென்னையில் இன்று மாலை திடீரென சிறு தூறல் மழை வந்து மின்னல் வேகத்தில் மாயமாகிப் போனது.
கேரளாவில் இன்னும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை சென்னையின் புறநகர்ப் பகுதிகள் சிலவற்றில் திடீர் காற்றுடன் லேசான தூறல் மழை காணப்பட்டது. ஆனால் சில விநாடிகளே இந்த தூறல் காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் லேசான காற்றும், வெயில் தணிந்தும் காணப்பட்டது. பல பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது. இரவில் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது
ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை லோக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (15) என்பவர் மழை பெய்ததால், தென்னை மரம் அருகே ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இறந்த மாணவன், கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு படித்து விட்டு, தற்போது தொழில்கல்வி சார்ந்த உயர்படிப்பு படிக்க முயற்சித்து வந்துள்ளார்.
கடலூரில் நேற்று மாலை இடி-மின்னலுடன் திடீரென மழை பெய்தது. மழையின்போது மின்னல் தாக்கியதில் கடலூர் நகரில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
திண்டுக்கல் நகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. நத்தம், கோபால்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று மதியம் சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.
மேட்டூரில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக்காற்றின் காரணமாக மேட்டூரின் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்தன.
ஊட்டியில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழை காரணமாக படகு இல்லத்தில் 1 மணி நேரத்திற்கு படகு சவாரி நிறுத்தப்பட்டது. கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஊட்டி ரயில் நிலையத்திலும் மழை வெளுத்து வாங்கியதன் காரணமாக வெள்ளக்காடாக காணப்பட்டது.