நெல்லையில் பரவலாக மழை - பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பாபநாசம், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கியது முதல் கடுமையான வெயில் நிலவி வருகிறது. மழையின்றி கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெப்ப சலனம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தூரலாக விட்டு விட்டு பெய்தது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை காலை நிலவரப்படி அம்பை 12, ஆய்க்குடி 22, சேரன்மகாதேவி, நாங்குநேரி 2, பாளையங்கோட்டை 7, ராதாபுரம் 6, சங்கரன்கோவில், நெல்லை 2, செங்கோட்டை 22, தென்காசி 7 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைப்பகுதியில் 67 மிமீ மழை பதிவாகியுள்ளது. தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.66 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 65.35 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 58 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 18 மிமீ மழை பதிவாகியுள்ளது. பிற அணைப்பகுதியான கடனா அணை 1, கருப்பா நதி 8, ராமநதி 10, குண்டாறு 14 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பாபநாசம், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயரும். இதனை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.