மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை கொட்டுமாம்!
மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதுடன் அந்தந்த மாவட்ட மக்களை குளிர்வித்தது. ஆனால் சென்னையில் வழக்கம்போல் வெயில் வெளுத்து வாங்கி கொண்டுதான் இருக்கிறது.
ஈரோட்டில் கடந்த ஒருவாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் ஈரோட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அதேபோல, கோவையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மாநகர மற்றும் புறநகரப் பகுதிகளில் கன மழை பெய்ததால் குழுமையான சூழல் நிலவியது. காந்திபுரம், பீளமேடு, ராமாநாதபுரம், ஆர்.எஸ்.புறம் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, கவுண்டம்பாளையம், துடியலூர், சூலூர் போன்ற புறநகரப் பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதிகளில் மற்றொரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.