அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் ஓயாத அனல் காற்று... சென்னைவாசிகள் கவலை
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் சென்னையில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்து ஒருவார காலமாகியும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அனலின் தாக்கம் ஓயவில்லை. சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் முடித்தாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. நேற்று வேலூரில் 107.24, திருத்தணியில் 107.06, கடலூரில் 104.54, நாகப்பட்டினம், மதுரையில் 104, கரூர் பரமத்தியில் 103.28, திருச்சியில் 103.1, சென்னையில் 102.92, புதுச்சேரியில் 102.2, பாளையங்கோட்டையில் 101.3, தூத்துக்குடி, காரைக்காலில் 101.12, டிகிரி பதிவாகி மக்களை வாட்டி எடுத்து வருகிறது.
இன்றும் பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. சென்னையில் காலை முதலே அனல் காற்று வீசுவதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூரில் இன்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வெப்பத்தை தணித்து வரும் நிலையில் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.
இதனிடையே தென் தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் கேரளாவில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவ காற்று வீசி வருகிறது. அடுத்த 3 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகலாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
தென் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.