இடியோடு கோடை மழை கொட்டப்போகுது.... பத்திரம் மக்களே! - வானிலை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகரில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாவும் வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை மக்கள் சமாளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் குளுமையான காற்று வீசி வருகிறது.
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ட்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது. இன்று 100 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது. காரணம் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதுதான்.
கோடை மழை
கத்திரி வெயில் தொடங்கியது முதலாகவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி புள்ளம்பாடி பகுதியில் 7 செ.மீ. மழை பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 6 செ-மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் குறிப்பிடத்தக்க அளவு மழை இல்லை.
அனல் குறையும்
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும். சென்னயைப் பொருத்தவரை புறநகர்ப் பகுதியில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் மேக மூட்டம்
சென்னையின் நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே உள்ளது. நேற்றிரவு பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பத்திரம் மக்களே
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கோடை மழைக்கு மின்னல் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். இன்றும் கோடை மழை இடியோடு பெய்ய வாய்ப்பு உள்ளது என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்திரம் மக்களே!