குற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை... அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு
குற்றாலம்: குற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை பெய்து வருவதால் அதன் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கடந்த 30-ஆம் தேதியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதிமுதல் தலைகாட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி மாலை முதல் 3-ஆம் தேதி அதிகாலை வரை பெய்தது.
இதனைத்தொடர்ந்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் வரத்து அதிகரித்து 2-ஆம் தேதி இரவுமுதல் ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. 3-ஆம் தேதி காலைமுதல் இன்றுகாலை வரை சாரல்மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டமும் அதிகரித்தது.அருவியில் விழும் நீரும் குறைவாக இருந்தது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து சாரல் மழையில்லாததால் வேதனையடைந்தனர்.
அப்போது மதியம் 1 மணிமுதல் வனப்பகுதியிலும், ஊருக்குள்ளும் சாரல்மழை கொட்டத்தொடங்கியுள்ளது. மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர்வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும் என்று நம்பபடுவதால் வியாபாரிகள் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாரல்மழை தொடர்ந்தால் அருவிகளில் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.