அம்பத்தூரில் வடியாத வெள்ளத்தால் முடங்கிய தொழில்கள்: பட்டினியில் தொழிலாளர்கள்
சென்னை: கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கடந்த 1 மாதகாலமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களும் வெள்ளத்தில் பழுதடைந்துள்ளன. இதனால், ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் அத்திப்பேடு தொழிற்பேட்டையில் உள்ள 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பத்தூர் சிட்கோ தொழிற் பேட்டையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பெரும்பாலான தொழிற் சாலைகள் செயல்படாமல் முடங்கின. இயந்திரங்கள் நாசமடைந்தன. இதனால், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்போது உற்பத்தி தொடங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், கடந்த 1 மாதகாலமாக தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களும் வெள்ளத்தில் பழுதடைந்துள்ளன. இதனால், ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் தரப்பில் கூறப்படுகிறது.
மிதக்கும் அம்பத்தூர்
அம்பத்தூரில் எப்போதும் தொழிலாளிகள் பரபரப்பாக இருக்கும் தொழில் நிறுவனங்களின் வாசல்களில் காவலாளிகள் உணவுக்கும் வழியில்லாமல் மழையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தீபாவளிக்குப் பிறகு பெய்த மழையால் ஏற்பட்ட உற்பத்தி முடக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதி பெய்த தொடர் மழை கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினியில் தொழிலாளர்கள்
இடுப்பளவு தண்ணீரில் முடிந்த அளவு இயந்திரங்களை பாதுகாக்க போராடிக் கொண்டிருந்தனர் தொழிலாளர்கள். சாலையில் ஓடும் தண்ணீரில் எங்கெங்கோ நிறுவனங்களிலிருந்து அடித்துக் கொண்டு வரப்பட்ட கொள்கலன்கள், மின்விசிறிகள், டயர்கள் மிதந்து சென்று கொண்டிருந்தன. வட இந்திய தொழிலாளர்கள் பலரும் பட்டினியில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடங்கிய உற்பத்தி
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமார் 8,000 த்துக்கும் மேல் உள்ளன. அம்பத்தூர் எஸ்டேட்டை ஒட்டிய பகுதிகளான பாடி, முகப்பேர், கொரட்டூர். பட்டரைவாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளும் அம்பத்தூரை உலக அளவிலான சந்தையில் போட்டியிட வைத்துள்ளன.
இந்த மழை எங்களுக்கு உற்பத்தி இழப்பை மட்டும் கொண்டுவரவில்லை. இந்த மழையினால் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று எங்களது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டால் தொழில் கைவிட்டு போய்விடும்.
பல ஆயிரம் கோடி இழப்பு
தற்போதுவரை சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பை தொழிற்பேட்டை சந்தித்துள்ளது. கள நிலவரங்களை உடனடியாக பெற முடியாததால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் ஆட்டோ மொபைல்துறை சார்ந்த உதிரிப்பாக தயாரிப்புகளில் உள்ளன.
லூகாஸ், சுந்தரம் பாசனர்ஸ், வீல்ஸ் இந்தியா, அசோக் லேலண்ட் நிறுவனங்களை நம்பி தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை அடுத்தடுத்த பல கார் உற்பத்தி நிறுவனங்களில் வருகையால் ஆசிய அளவில் மிக முக்கியமான தொழில் பேட்டையாக மாறியது.
வாழ்வாதாரம் பாதிப்பு
தொழிற்சாலைகள் முடங்கியதால்,அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலிருந்து வேலைக்காக இங்கு வந்துள்ள தொழிலாளர்கள் பலர், தொழிற்சாலைகளின் திறந்தவெளி மாடிகளில் தங்கியுள்ளனர். தொழிற்பேட்டை வளாகத்திற்குள் புகுந்துள்ள வெள்ளத்தை வெளியேற்றி, தேவையான நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எப்படி மீளப்போகிறோம்?
நிறுவனம் மூடப்பட்டிருந்த நாட்களுக்கு ஏற்ப தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியான உற்பத்தி முடக்கம், முதலீடுகள் இழப்பு, மீள் செலவுகள், ஓடர்கள் கைவிட்டு போவது என கடும் நெருக்கடிகள் உள்ளன. வங்கியாளர்கள் இதை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் கொடுக்கவில்லை என்றாலும் கடனுக்கான வட்டி மற்றும் ஓடி போன்றவற்றில் சில மாதங்களாவது நெருக்கடி கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.