சில்லுன்னு காற்றுடன் சென்னையை சிலிர்க்க வைத்த ஜில் ஜில் மழை
சென்னையில் இன்று மாலை பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சீக்கிரமாகவே துவங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான தேனி, கோவை, நீலகிரியில் மழை பெய்து வருகிறது. அதேபோல, பல்வேறு மாவட்டங்கள் உட்பட கேரளா, கர்நாடகாவின் ஒரு சில பகுதிகள் என கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 வருடங்கள் கழித்து இடுக்கி அணை தற்போதுதான் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்தமிழக பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த பலத்த காற்று 55 கிலோ மீட்டர் வரைகூட வீசும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மழை:
இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்தது. மயிலாப்பூர், முகப்பேர், அண்ணா நகர், அம்பத்தூர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல புறநகர்ப் பகுதிகளிலும் கூட மழை பெய்தது.
ஆழ்வார்ப்பேட்டையிலும் மழை பெய்தது. ஆனால் அங்கு காவேரி மருத்துவமனை முன்பு கூடியுள்ள திமுகவினர் நனைந்தபடி தங்களது தலைவர் கருணாநிதிக்காக காத்துள்ளனர்.