நள்ளிரவிலும் தொடர்ந்த மழை.. மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்!
சென்னை: சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக பரவலாக மழை பெய்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதேவேளையில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பல்லாவரம், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நந்தம்பாக்கம், முகலிவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவிலும் விடாது சாரல் மழை பெய்து வருகிறது.
போரூர், பூந்தமல்லி, மதுரவாயலில் இடியுடன் கனமழை கொட்டி வருகிறது. அதனால், குளிச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், கடுமையான மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதேபோல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்துள்ளது.