”அந்த 7 நாட்கள்” - புதிய பாடம் கற்பித்துச் சென்ற புயல் மழைக் காலம்!
சென்னை: சென்னை வந்து கிட்டதட்ட 3 வருடங்கள் நெருங்கி விட்டது. தினம் தோறும் மக்களின் வாழ்க்கை, அரசியல், சினிமா என்று செய்திகளைக் கொண்டு சேர்க்கும் மனநிறைவான பணியில் நான் ஈடுபட்டுள்ளேன்.
ஆனால், கடந்த வாரத்தின் 7 நாட்கள் என்னைப் போன்றவர்களின் வாழ்க்கையையே ஒரு கணம் புரட்டிப் போட்டுவிட்டது. தொடர்பு எல்லைக்கு அப்பால் தள்ளி செய்திகளை கொண்டு சேர்க்கும் எனக்கே வெளி உலகில் என்ன நடக்கின்றது எனத் தெரியாமல் தவிக்க விட்டுவிட்டது.
அன்று காலை மெதுவாகத்தான் மழை எட்டிப் பார்த்தது. சரி எப்போதும் போல நின்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தோம் நான் வசிக்கும் பகுதியில். கொஞ்ச, கொஞ்சமாக அதிகரித்த மழை வீட்டிற்குள்ளும் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
திக்குத் தெரியாத வீட்டில்:
சிறிது நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விட்டது. போனிலோ கொஞ்சமே கொஞ்சம் சார்ஜ் ஒட்டிக் கொண்டு இருந்தது. காலை 11 மணிக்கே மாலை 6 மணி போல் கும்மிருட்டு. நான் வசிக்கும் பகுதி அடுக்குமாடி என்றாலும் தரைத்தள வீடுதான். தோழிகள் நான்கு பேரும் இருட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம். சாப்பாட்டிற்கும் தட்டுத் தடுமாறி சமைக்க வேண்டிய நிலை.
எங்கும் சூழ்ந்து கிடந்த இருட்டு:
மாலை நெருங்க, நெருங்க இருட்டும், மழையும் அதிகமானதே தவிர குறையவே இல்லை. கொஞ்சமாக சாதம் மட்டும் வடித்து, இருந்த தயிரை வழித்துப் போட்டு சாப்பிட்டுவிட்டோம். இனி மழையில் வெளியிலும் செல்ல முடியாத நிலையில், குளிரால் தூக்கமும் வரவில்லை. மாலை நேரம் வந்ததும், கார்த்திகை அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி வீடு முழுவதும் ஏற்றி வைத்துவிட்டோம். மெழுகுவர்த்திகளும் கிடைக்கவில்லை.
செவ்வென பெய்யும் மழை:
தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஹாலிலேயே படுக்கையை விரித்து படுத்துவிட்டோம். இதை எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது மழை. இரண்டாம் நாள் காலையில் எழுந்து ஏதோ ஒரு சமையலை செய்து பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
மின்சாரமும் இல்லை:
ஒருவழியாக மதியம் 2 மணிக்கு மேல் மின்சாரம் வந்தது. சரியென்று எல்லா போன்களையும் சார்ஜ் செய்தால், காத்திருந்தது அடுத்த ஆப்பு. ஒரு மொபைலில் கூட சிக்னல் இல்லை. இணைய இணைப்பும் இல்லை. டிவி செய்தி மட்டுமே பார்த்துக் கொண்டு தேமே என்று தொடர்ந்த அந்த நாளையும் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து, மின்சாரத்தைப் போக்கி புண்ணியம் கட்டிக் கொண்டது. ஒருவகையில் இந்த மழையில் மின்சாரம் இல்லாமல் இருப்பதும் நல்லதென்றே தோன்றியது.
இவ்வளவுதான் வாழ்க்கை:
பால் பாக்கெட்டுகள் கிடைக்கவில்லை...கிடைத்தாலும் 75 ரூபாய் விலை... அடுத்த நொடி என்ன செய்யப் போகின்றோம் என்ற பீதி அடிவயிற்றில் பயப்பந்தாய் சுழன்றது. இதோ எங்கோ ஒரு மூலையில் எனக்காக தவித்திருக்கும் குடும்பத்தினை தொடர்பு கொள்ள முடியவில்லை.... ஆனாலும், பயமில்லை... சென்னையை விட்டு நீங்கவும் மனமில்லை...
நின்று போகாதா மழை:
இதோ என்னுடைய சகோதர, சகோதரிகள், என் நண்பர்கள் இங்கே தவித்துக் கொண்டிருக்கும்போது இந்த மழை என்னை ஒன்றும் செய்துவிடாது என்றே தோன்றியது.... அவர்களுக்காகவேனும் மழை நின்று விடவேண்டும் என்று துடித்தது மனம்.
rn |
அன்பு மட்டுமே நிரந்தரம்:
7 நாட்கள் மனதில் பயத்தினை கிளப்பினாலும், செல்போனும், மின்சாரமும், இணையமும் இல்லாத வாழ்க்கையும், மேல் வீட்டிலிருந்து நொடிக்கு ஒருமுறை வந்த அன்பு அழைப்பும், கூடவே இருந்த தோழிகள் குடும்பமாய் மாறிப்போன விந்தையும் உணர்த்திய உண்மை இதுதான்... "எதற்கும் அடிமையாகி விடாதீர்கள்... மிச்சம் இருக்கப் போவது மனிதம் மட்டுமே... ஒருவருக்கொருவர் செய்யும் உதவியும், உண்மையான அன்பும் மட்டுமே நிலைத்து நிற்கும்... உயிரில்லாத மின்சாதனங்களோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ கிடையாது"...!