வருஷத்துக்கு 1 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு – தக்கர்பாபா வித்யாலயாவில் தொடக்கம்
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஆண்டுக்கு 1 கோடி லிட்டர் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் வழங்கிய ரூபாய் 5 லட்சத்தில் இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஆகாஷ் கங்கா அறக்கட்டளை அமைத்துள்ளது.
தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயம் வளாகத்தில் 4 அடி விட்டமும், 15 அடி ஆழமும் கொண்ட 9 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டடங்களின் மொட்டை மாடியிலிருந்தும், மைதானத்திலிருந்தும் வரும் மழைநீர் இந்த 9 கிணறுகள் மூலம் பூமிக்கு விடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும் என்கிறார் இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவிய ஆகாஷ் கங்கா அறக்கட்டளை அறங்காவலர் சேகர் ராகவன்.
தக்கர்பாபா வித்யாலயம் செயலாளர் ஸ்தாணுநாதன், இணைச் செயலாளர் மாருதி, மழைநீர் நிபுணர் இந்துகாந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.