மேலடுக்கு சுழற்சி மறைந்தது... வெப்பம் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யும்!
சென்னை: லட்சத்தீவு அருகே உள்ள மேலடுக்கு சுழற்சி மறைந்த போதும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என நேற்று அறிவிக்கப் பட்டிருந்தது.
இது தொடர்பாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், ‘லட்சத்தீவு அருகே உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழைபெய்துள்ளது. மேலடுக்கு சுழற்சி மறைந்து வெப்பச்சலனம் காணப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்' என்றார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு :-
சங்கராபுரம் 12 செ.மீ., குளச்சல் 11 செ.மீ., பேச்சிப்பாறை 10 செ.மீ., இரணியல், வேலூர், திருப்பத்தூர் தலா 8 செ.மீ., ஏற்காடு, தர்மபுரி, பூதப்பாண்டி, போளூர் தலா 6 செ.மீ., ஒகனேக்கல், திருவண்ணாமலை, திருமயம், சூளகிரி, பாபநாசம், பூந்தமல்லி, மயிலாடி, தக்கலை, தேன்கனிக்கோட்டை, பெண்ணாகரம் தலா 5 செ.மீ., சித்தம்பட்டி, ஓமலூர், கீரனூர், திண்டிவனம் தலா 4 செ.மீ., விரிஞ்சிபுரம், வேடச்சந்தூர், செஞ்சி, வல்லம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, தாளவாடி, துவாக்குடி, ஓசூர், திருவாடானை, ஏலகிரி, திருக்கோவிலூர், பாப்பிரெட்டிப்பட்டி, தேவலா, சூரங்குடி, மேட்டூர், ராயக்கோட்டை, மணிமுத்தாறு, கொடைக்கானல், ராதாபுரம், முதுகுளத்தூர், திருக்காட்டுப்பள்ளி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.