சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை.. மன்னார்குடியில் கன மழை
சென்னை: சென்னையின் சுற்றுப் பகுதிகளில் இன்று இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
திருவொற்றியூர், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல சென்னையின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. விட்டு விட்டு தூறல் மழை காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கிக் காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து இன்றும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல மன்னார்குடியில் இன்று மாலை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.