தமிழகத்தைப் புரட்டிப் போட்ட கன மழைக்கு 14 பேர் பலி.. புதுச்சேரி அருகே கரையைக் கடந்த தாழ்வுமண்டலம்
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களை குறிப்பாக வட கடலோர மாவட்டங்களை மிரட்டிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு ஏழரை மணியளவில் கரையைக் கடந்தது. புதுச்சேரி அருகே இது கரையைக் கடந்தது.
சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை தீவிரம் அடைந்தது. நேற்று காலை 11.30 மணி அளவில் புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது தாழ்வு மண்டலம். பின்னர் மெதுவாக நகர ஆரம்பித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று இரவு 7.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததையொட்டி சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், வட கடலோர மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அம்பத்தூரில் பேய் மழை...
சென்னை புறநகர்களில் மிக பலத்த மழை பெய்ததால் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர்களிலேயே அதிக அளவாக அம்பத்தூரில் 20 செமீ மழை பதிவானது. கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் அடைமழை கொட்டியது. நெய்வேலியில் அதிகபட்சமாக 45 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
கனமழை தொடரும்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதும் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் காற்றுடன் மழை பெய்தது. காற்றழுத்த மண்டலம் நிலப்பகுதிக்குள் வந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால், வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
14 பேர் பலி...
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுவையிலும் 14 பேர் மழை தொடர்பாக பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேரும், கன்னியாகுமரி, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒருவரும், புதுச்சேரியில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.
விமானங்கள் தாமதம்:
தொடர் மழை காரணமாக சென்னை வந்த விமானங்கள் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. சுமார் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.