குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உள் தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் வெயில் அள்ளி கொட்டி வரும் இந்த வேளையில், உள் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பகல் நேர வெப்பநிலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் மட்டும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் தீயாக அள்ளி இறைத்தது. இதில் அதிக பட்சமாக திண்டுக்கல்லில் 108 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இது தவிர திருத்தணியில், வேலூரில், திருப்பூர், திருச்சி, கரூர், சேலத்தில், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மக்கள் வெளியே தலையை காட்ட முடியாத அளவுக்கு 100 டிகிரி பாரன்ஹீட்டாக தாண்டி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் இன்று உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதாவது, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கோவை, அரியலூர், மதுரை, பெரம்பலூர், விருதுநகர், திருப்பூர் போன்ற ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்,
இதனால் உள் தமிழகத்தில் இன்றைய வெப்பநிலை அதிகமாக 40 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ராமநாதபுரம், குமரி மாவட்டங்களில் கடல் சீற்றம் இன்னும் கட்டுக்குள் வராததால், மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.