தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: ரமணன்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருந்த ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை மறைந்து விட்டது. இருப்பினும் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாலும், இலங்கைக்குத் தெற்கே மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகம், புதுச்சேரியில் மேலும் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 7ம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கடலூர் மாவட்டத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தோன்றிய மற்றொரு காற்றழுத்தம் வடக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மூன்று மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றுப் பாலங்கள் சிதைந்துள்ளன. ஏரிகள் உடைந்துள்ளன. பல ஏரிகள் நிரம்பி வழிந்தன.
இதற்கிடையே கடந்த 4 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து சற்று வெயில் எட்டிப் பார்த்தது. ஆனால், வங்கக் கடலில் இலங்கை அருகே தென்மேற்கு திசையில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவானது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தென் கிழக்கு வங்கக் கடலில் இலங்கை அருகே நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சனிக்கிழமை உதயமான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது.
மேலும் இலங்கையின் தெற்கே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். உட்புற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 3 நாட்களில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இந்த மழை அதன் பின்னர் படிப்படியாக குறையும். இலங்கைக்குத் தெற்கே நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியானது, தாழ்வு நிலையாக உருவெடுக்க வாய்ப்பு மிக மிக குறைவு.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் குடவாசல் பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மரக்காணத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளதாக ரமணன் கூறியுள்ளார்.