சென்னை விமான நிலையத்தில் வெள்ளம்: ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டம் !
சென்னை: சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தன. சென்னையில் இடைவிடாது விரட்டி விரட்டி பெய்த மழையினால் நகரமே ஸ்தம்பித்தது. சாலைகளில் பெருக்கெடுத்த ஓடிய மழைநீரால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பெரும்பாலான இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.
இந்நிலையில் சென்னையில் நவம்பர் 30ம் தேதி முதல் பெய்த பலத்த மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையில் வெள்ளம் புகுந்தது. இதனால் கடந்த 1ம்தேதி இரவு முதல் பயணிகள் விமான சேவை அனைத்தும் நிறுத்தப்பட்டது. 6ம்தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஓடுபாதை முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் விமான நிலையத்திற்கு தரை இறங்குவதற்காக வந்த 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டன. மேலும் விமான நிலையத்திற்குள் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும் ஓடு பாதையிலும் வெள்ளமாக தேங்கியிருந்த மழை நீரால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளத்தால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20 விமானங்கள் சேதமடைந்தன. மேலும் 2 பெரிய விமானங்களை இழுத்து சென்று வனப்பகுதிக்குள் வெள்ளம் புரட்டி போட்டிருந்தது.
விமான நிலைய ஓடு பாதையின் மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு விமானங்கள் மட்டுமே தப்பின. மற்ற எல்லா விமானங்களும் வெள்ள நீரில் மிதந்தன. இதனால் அவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க பல கோடி செலவாகும் என்று தெரிகிறது.
சென்னை விமான நிலையத்துக்குள் புகுந்த வெள்ளத்தால் சுமார் 35 விமானங்கள் சேதமடைந்துள்ளன. தனியார் விமான நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான சேவை 5 நாட்கள் முடங்கியது. இதனால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் முழுமையாக வடிந்து விட்டாலும் இன்னமும் 100 சதவீத இயல்பு நிலை திரும்பவில்லை