தமிழகம் முழுக்க பரவலாக மழை.. சென்னையில் மாலையில் வெளுத்து வாங்கிய கன மழை
சென்னையில் அடையாறு, மைலாப்பூர், அண்ணாநகர், மதுரவாயல் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும், புறநகர்களிலும் மாலையில் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, புதுச்சேரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது
சென்னையில் கன மழை:
சென்னையில் இன்று பிற்பகலுக்கு மேல் மைலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. மாலையில் சற்று நின்ற மழை பின்னர் வலுத்தது. இரவு ஏழரை மணி நிலவரப்படி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை விடாமல் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்தபடி உள்ளது. இதனால் பள்ளி விட்டு வீடு திரும்புவோர், அலுவலகங்களுக்குச் சென்று திரும்பியோர் பாதிப்புக்குள்ளானார்கள். பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கியச் சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி சென்னையில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.