ஐப்பசி மாத அடைமழைக்கு இதமா சூடா சுக்கு மல்லி காபி
ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் என்று நம்ம தாத்தா பாட்டிக்கு நல்லா தெரியும் அதனாலதான் சுக்கு மல்லி காபி சாப்பிடுவது நல்லது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
சென்னை: பருவமழை நோய்கள் மக்களை மிரட்டி வருகின்றன. அச்சம் வேண்டாம் எளிதில் சமாளிக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். ஐப்பசி மாத அடைமழை காலத்தில் ஏற்படும் நோய்களை சமையலறையில் உள்ள சுக்கு, மல்லி, சீரகம், மிளகு கொண்டே கசாயம், காபி வைத்து குடித்து நோய்களை விரட்டியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் பருவமழை கொட்டி வருகிறது. மழைக்கால நோய்களை எதிர்கொள்வது எவ்வாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்க் காடாகவே உள்ளது. மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். பருவமழை காலத்தில் எளிதில் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வரும் நிலையில் மழைக்காலத்தில் நோய்களின் பாதிப்பும் அதிகமாகும். டைபாய்டு, மலேரியா,எலிக்காய்ச்சல் என பல காய்ச்சல்கள் மக்களை பாதிக்கின்றன. இதற்கு மருத்துவர்களிடம் அவசியம் சென்று சிகிச்சை பெற்றுதான் ஆகவேண்டும்.
மழைக்காலம் தொடங்கி விட்டாலே சளித் தொந்தரவு, தலைவலி, தொண்டை கரகரப்பு போன்றவையும் மக்களை எளிதில் பாதிக்கின்றன. அப்பசி ( ஐப்பசி) மாசம் அடைமழைதான் இதுக்கு வீட்டிலேயே சுக்கு கசாயம் வைத்து குடிக்கலாம் என்று பாட்டிகள் கூறி வருகின்றனர்.
மக்களை அச்சுறுத்தும் நோய்கள்
தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை இந்த வைரஸ் நோய்க்கிருமிகள் தாக்கி இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும்.
காய்ச்சல் பாதிப்பு
மழைக்காலத்தில் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுவது இயற்கை. வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இந்த காய்ச்சலினால் அடிவயிறு வலிக்கும். தலைவலி வாட்டி எடுக்கும். விட்டு விட்டு காய்ச்சல் வரும். எனவே உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். நன்றாக ஓய்வெடுக்கவேண்டியது அவசியம்.
வயிற்றுப் போக்கு
மழைக்காலங்களில் மிக எளிதாக வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீராலேயே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
காலில் புண்கள்
மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு, சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது. இரவு உறங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு கால் கழுவலாம்.குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவலாம்.
சளி, தொண்டை பிரச்சினை
மழை காலத்தில் சாதாரணமாகவே பலருக்கும் சளி தொந்தரவு அதிகமாகவே இருக்கும். சாதாரணமாக வரும் சளி இருமலை நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சக்தி குறைவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மிளகு சீரகம்
சளிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு மூக்கடைப்பில் தொடங்கி சளி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். தொண்டை கட்டிக்கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை அருந்துவதும் நன்மை தரும்.
இதமான சுக்குமல்லி காபி
மழை காலத்தில் சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும். பல நோய்களுக்கு மருந்தாக இருந்து வருகிறது. செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல் போன்ற பிரச்னைகள் தீரும்.