எல்லாவற்றுக்கும் ஒரு 'லிமிட்' உள்ளது.. ஆளுநர் மாளிகை எச்சரிக்கை!
Recommended Video
சென்னை: எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உள்ளது.. அளவை தாண்டியதால் நடவடிக்கை பாய்ந்தது என்று நக்கீரன் இதழ் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து, தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தொடர்புபடுத்தி, நக்கீரன் வார இதழ் கட்டுரை வெளியிட்டதற்காக, இதழின் ஆசிரியர் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
புனே நகருக்கு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்றபோது கோபால் கைது செய்யப்பட்டார்.
[நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை- ஆளுநர் மாளிகை விளக்கம் ]
பத்திரிகை சுதந்திரம்
இதையடுத்து பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவதாக ஆளுநருக்கு எதிராக நாடு முழுக்க கண்டன குரல்கள் எழும்பின. நீதிமன்றத்தில் கோபாலுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி, தி இந்து ஆசிரியர் என்.ராம் ஆஜராகி வாதிட்டார். நக்கீரன் கோபால் மீதான வழக்குகளுக்கு முகாந்திரம் இல்லை என கூறிய நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
பொறுமை
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெகு காலம் பொறுமையாக சென்ற பிறகுதான், நக்கீரன் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் அறிக்கையில் உள்ள தகவல்களை பாருங்கள்.
எல்லை உள்ளது
எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. ஆளுநர் மாளிகையும்கூட, இந்த விஷயம் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மரியாதையுடன் கூடிய மவுனத்தில் இருந்தது. ஆனால், இது தொடர்கதையாகிவிட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. பேராசிரியை தொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து கொண்டுள்ளது. ஆனால், நக்கீரன் இதழில் மஞ்சள் பத்திரிகை போன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெறுப்புகள்
வெறுப்பு உணர்வு காரணமாகத்தான், நக்கீரனில் இப்படி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. இப்படி போலியான, மஞ்சள் பத்திரிகை தரத்திலான கட்டுரைக்கு மரியாதைக்குரிய நபர்களும் ஆதரவு அளிப்பது வருத்தம் தருகிறது. அவர்களுக்கு நிஜம் தெரியவில்லை என்பதைத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ச்சி
அடிப்படை ஆதாரங்களே இல்லாமல், தொடர்ச்சியாக சேற்றை வாரி இறைத்ததால்தான், சட்டப்படி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.