ஆட்சியை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவர் வினோத் ராய்.. 2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா பரபரப்பு பேட்டி
2ஜி வழக்கை ஆரம்பித்து வைத்த வினோத் ராய் குறித்து ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
சென்னை: திமுக கட்சியை சேர்ந்த ஆ.ராசா நேற்று தன்னுடைய '2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். 2ஜி வழக்கின் உண்மையான விவரங்கள் குறித்து இவர் அதில் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இவர் தற்போது முன்னாள் சிஏஜி தலைவர் வினோத் ராய் குறித்து நிறைய குற்றச்சாட்டுகள் வைத்து இருக்கிறார். வினோத் ராய் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் மன்மோகன் சிங் குறித்தும் தனது பேட்டியில் முக்கிய விஷயங்கள் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் ''மன்மோகன் சிங் கூட என்னை நம்பவில்லை'' என்று 2ஜி வழக்கு குறித்து ராசா ஆதங்கப்பட்டு இருந்தார்.
அழிவு
இதுகுறித்து பேசிய அவர் ''2ஜி ஏலத்தில் எந்த முறைகேடும் நடக்காத போது வினோத் ராய் லட்சக்கணக்கில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு வைத்தார். அவருடைய நோக்கம் எல்லாம் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சியாக அழிக்க வேண்டும் என்பதே. அவரை இதற்காக கைது கூட செய்யலாம்'' என்று குறிப்பிட்டார்.
இயக்கினார்
மேலும் ''வினோத் இதற்கு முழு காரணம் இல்லை. அவர் வெறும் கருவி மட்டும்தான். அவரை பின்னாடி இருந்து யாரோ இயக்கி இருக்கிறார்கள். பாஜகவிற்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது. 2ஜி வழக்கை காரணம் காட்டித்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
விசாரனை
இதுகுறித்து மேலும் பேசிய அவர் ''அவருக்கு பின்புலமாக யார் இருந்தார்கள் என்று விசாரிக்க வேண்டும். அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும். இப்படி பொய்யான குற்றச்சாட்டை உருவாக்கியதற்கான உண்மையான காரணம் என்ன என்றும் நீதிமன்றம் ஆராய வேண்டும்'' என்று ராசா குறிப்பிட்டார்.
மன்மோகன் சிங் வருத்தம்
அதேபோல் ''இந்த வழக்கில் எனக்கு நடந்தது குறித்து மன்மோகன் சிங் மிகவும் வருத்தப்பட்டார். அவர் உடைந்தே போய்விட்டார். எங்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பது குறித்து விரைவில் வெளியிடுவேன்'' என்று கூறியுள்ளார்.