பாடாய்படுத்தும் பாகுபலி மேனியா...சந்தையில் பாகுபலி சேலைகள் விற்பனை படுஜோர்!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி 2 அனைவர் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி சேலைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை : பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பெண்களும் தங்கள் பங்கிற்கு தங்களது உற்சாகத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள பாகுபலி சேலைகளை ஆசையுடன் வாங்கி அணிந்து வருகின்றனர்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டக்குபதி, சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பாகுபலி 2 படம் சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டாகி வருகின்றன.
முதல் பாகத்தில் படத்தில் செய்யப்பட்டிருந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் இருந்தது. கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்பதற்கான பதில் அடுத்த பாகத்தில் வெளியாகும் என்று பாகுபலி முதல் பாகம் முடிவடைந்தது.
2015ல் வெளியான முதல் பாகத்தை தொடர்ந்து 2 வருட இடைவேளையில் 2017ல் பாகுபலி 2 வெளியாகியுள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை பார்த்து விட வேண்டும் என்றும், படத்தின் பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்கவும் டிக்கெட் முன்பதிவு செய்து பாகுபலி பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
செய்திகள், விளம்பரங்கள் எல்லாவற்றிலும் மகேந்திர பாகுபலி மேனியா மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண்களும் தங்கள் பங்கிற்கு பாகுபலி படம் பிரிண்ட் செய்யப்பட்ட புடவைகளை ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வரிசைகட்டி நின்று தங்களது பாகுபலி ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பாகுபலி புடவை கட்டிய பெண்களின் அழகைப் பார்த்து பலரும் பாகுபலி புடவைக்கு ஆர்டர் செய்து வருவதால் படுஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது.