ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் மீட்பு.. சென்னையில் மேளதாளத்துடன் வரவேற்பு
குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன் சோழன், உலகமாதேவி சிலைகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.
Recommended Video
சென்னை: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.
50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சொந்தமான ராஜராஜசோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் அண்மையில் கண்டறியப்பட்டது.
கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த சிலர் மூலம் சென்னைக்கு கடத்தினர். பின்னர் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளை விற்பனை செய்தனர்.
அகமதாபாத் அருங்காட்சியகம்
இதனை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இன்று சென்னை வந்தன
அப்போது, இரு சிலைகளும் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, சிலைகளை அருங்காட்சியக அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ரயில் மூலம் தமிழக சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் அந்த சிலைகளை இன்று சென்னை கொண்டு வந்தனர்.
1000 ஆண்டுகள் பொக்கிஷம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சிலைகளுக்கு மேளதாளத்துடன் தேவாரம், திருவாசகம் பாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இரண்டு சிலைகளும் 1000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள் ஆகும்.
ரூ.150 கோடி மதிப்பு
இதில் இரண்டரை அடி உயரமுள்ள ராஜராஜன் சிலையின் மதிப்பு 100 கோடி ரூபாய். இரண்டடிக்கும் குறைவாக உள்ள உலகமாதேவியின் சிலை மதிப்பு 50 கோடி ரூபாய் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.