இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் மரணம்- ராஜஸ்தான் எஸ்பி பகீர் தகவல்
கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துதான் பெரியபாண்டியன் மரணமடைந்ததாக ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜோத்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரனின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில்தான் பெரியபாண்டியன் மரணமடைந்ததாக ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் தனது அறிக்கையில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் ஒரு நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீஸார், முக்கிய குற்றவாளிகளான தினேஷ் சவுத்ரி, நாதுராம் உள்ளிட்டோரை தேடி வந்தனர். இதனிடையே கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெரியபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கொள்ளையர்கள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
பெரியபாண்டியன் பலி
நாதுராம் உள்ளிட்ட கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது பெரியபாண்டியனின் துப்பாக்கியை பறித்த நாதுராம் போலீஸாரை நோக்கி சுட்டார். இதில் பெரியபாண்டியன் உயிரிழந்துவிட்டார். மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயமடைந்தார். இந்நிலையில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். இதனிடையே தினேஷ் சவுத்ரியை மட்டும் கைது செய்துவிட்டு இன்று தமிழகம் விரைந்தனர்.
பாலி மாவட்ட எஸ்பி அறிக்கை
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் போலீஸ் எஸ்பி தீபக் பார்கவ் அறிக்கையில், கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துதான் பெரியபாண்டியன் உயிர் பிரிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பெரியபாண்டியன், முனிசேகர் துப்பாக்கிகளை ஆய்வு செய்த பின்னர் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், கொள்ளையன் நாதுராம் பாலி மாவட்டத்தில் ராம்வாஸ் கிராமத்தில் பதுங்கி இருந்தான். பெரியபாண்டியன் தலைமையிலான 5 பேர் கொண்ட வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தது.
முனிசேகர் உள்ளிட்டோர் தப்பினர்
செயல்படாத ரசாயன ஆலையில் காவலாளிகள் பாதுகாப்பில் இருந்தான் நாதுராம். பெரியபாண்டியன் உள்ளிட்டோர் ஆலைக்குள் சென்று நாதுராமை சுற்றி வளைத்தனர். நாதுராமும் உடன் இருந்தவர்களும் தாக்கியதில் முனிசேகர் உள்ளிட்ட 4 பேர் தப்பி வந்தனர். கம்பியால் தாக்கப்பட்டு காயம் அடைந்ததால் பெரியபாண்டியனால் தப்ப முடியவில்லை.
குறி தவறி குண்டு பாய்ந்தது
நாதுராமை நோக்கி முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பெரியபாண்டியன் இறந்து 3 நாள்களாகியும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து சென்னை போலீஸ் மவுனம் காக்கின்றனர்.