சசிகலா நடராஜனுக்கு எதிராக பேசாம இருக்க முடியாது- ராஜாத்தி அம்மாள் தரப்பிடம் சசிகலா புஷ்பா அடம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவுக்கு காரணமே சசிகலா நடராஜன்தான் என தாம் குற்றம் சாட்டாமல் அமைதி காக்க முடியாது என திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தரப்பிடம் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்க ராஜாத்தி அம்மாள் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சசிகலா நடராஜனுடன் 45 நிமிடம் பேசினார்.
சசிகலா நடராஜன்- ராஜாத்தி அம்மாள்
இப்பேச்சுகளின் போது ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலா புஷ்பா தம் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த உதவுமாறு ராஜாத்தி அம்மாளிடம் சசிகலா நடராஜன் கேட்டிருக்கிறார். தம்முடைய சமூகத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்த தாம் உதவுவதாக ராஜாத்தி அம்மாளும் வாக்குறுதி அளித்திருந்தார்.
டெல்லியில் பேச்சுவார்த்தை
இதையடுத்து ராஜாத்தி அம்மாளின் உதவியாளர் ஒருவர் டெல்லியில் சசிகலா புஷ்பாவை சந்தித்து பேசியிருக்கிறார். ஆனால் சசிகலா புஷ்பாவோ சசிகலா நடராஜன் மீதான தம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக அமைச்சர்களே ஆதரவு தெரிவிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
ஜெ. பாராட்டுவார்
அத்துடன் ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர்களின் கருத்தே வேறாக உள்ளது. நிச்சயமாக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்து என்னுடைய குற்றச்சாட்டை நியாயப்படுத்தும்விதமாக பாராட்டு தெரிவிப்பார் எனக் கூறியுள்ளார்.
உதவ முடியவில்லையே
மேலும் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த கனிமொழி குடும்பத்துக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்... ஆனால் இந்த விவகாரத்தில் என்னால் உதவ முடியாது என கறாராக பேசியிருக்கிறார். இது ராஜாத்தி அம்மாள் மூலம் சசிகலா நடராஜனுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்தே சசிகலா புஷ்பாவின் பாதுகாப்புக்கு வந்த ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.