பின்புற வாசல் வழியாக வந்தவர்... ராஜேந்திர பாலாஜியை வாரிய கேபி முனுசாமி!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்புற வாசல் வழியகாக கட்சிகுகு வந்தவர் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்புற வாசல் வழியகாக கட்சிகுகு வந்தவர் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி கட்சிக்கு எந்த தியாகமும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தினகரனை கட்சியில் இருந்து யாரும் ஒதுக்க முடியாது என்றார். துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் சசிகலாதான் ஒவ்வொருவரையும் உருவாக்கினார் என்று பழிவாங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் சசிகலா விரைவில் விடுதலையாகி கட்சிப்பணியாற்றுவார் என்றும் கூறினார்.
ஓபிஎஸ் அணி அதிர்ச்சி
அவரது இந்த பேச்சு ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சியடைச் செய்தது. ஒரு சில அமைச்சர்கள் டிடிவி தினகரனையும் சசிகலா குடும்பத்தினரையும் ஒதுக்குவதாக கூறும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடகமாடுகிறார் எடப்பாடி
இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரன் மற்றும் சசிகலாவோடு சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை
தங்கள் அணியின் கோரிக்கைகளை, பழனிசாமி அணியினர் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அணியினர் சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர் என்ற அவர் அவர்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்றார்.
மக்களை ஏமாற்றுகின்றனர்
சசிகலாவை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர் என்றும் கேபி முனுசாமி சாடினார். தினகரனை யாரும் சந்திக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர்.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஆனால் அவரது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தினமும் தினகரனை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேபி முனுசாமி கேள்வி எழுப்பினார்.
பின்வாசல் வழியாக வந்தவர்
மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்றும் கேபி முனுசாமி சாடினார். ராஜேந்திர பாலாஜி கட்சிக்கு எந்த தியாகமும் செய்யவில்லை என்ற அவர், பின்புற வாசல் வழியாக கட்சிக்கு வந்தவர் என்றும் சசிகலாவுக்கு துதிபாடி பதவியை பெற்றவர் என்றும் கேபி முனுசாமி தெரிவித்தார்.