குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி ஓட்டுபோடனும் தெரியுமா? சொல்கிறார் ராஜேஷ் லக்கானி!
குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கமளித்துள்ளார்.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அவர் கூறியதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பிக்களும், எம்எல்ஏக்களும் வாக்களிக்கவுள்ளனர். எம்பிக்களுக்கு பச்சை வண்ணத்திலும், எம்எல்ஏக்களுக்கு பிங்க் நிறத்திலும் வாக்குச்சீட்டு தரப்படும் என்றார். னாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கும் சட்டசபை செயலாளர் கடிதம் எழுதுவார் என அவர் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் ஓட்டுபோட வேண்டும் என்றால் அதுபற்றி 6 ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு சம்பந்தப்பட்ட எம்பி அல்லது எம்எல்ஏ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 13ஆம் தேதிக்குள் அதை தேர்தல் கமிஷன் உறுதி செய்யும் என்றும் ராஜேஷ் லக்கானி கூறினார்.
கூடுதலாக 2 வாக்குப் பெட்டிகளை 12ஆம் தேதி அலுவலர்கள் டெல்லிக்கு சென்று வாங்கி வருவார்கள் என்றும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு பூத் சிலிப்பை தேர்தல் கமிஷன் அளிக்கும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.