பணப்பட்டுவாடா புகார்.. தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க டெல்லி விரைகிறார் ராஜேஷ் லக்கானி
தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க லக்கானி நாளை டெல்லி செல்கிறார்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாட நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியின் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.85 கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வருமானவரித்துறை ஒப்படைத்தது. இது தொடர்பான புகார் குறித்து 48 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.