3 தொகுதி தேர்தல்... பிரசாரத்திற்குப் போகும் தலைவர்களின் பயணச் செலவில் சலுகை: தேர்தல் ஆணையம்
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் மற்றும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபடும் கட்சித் தலைவர்களுக்கான பயணச் செலவில் சலுகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தலுக்கான அறிவிப்பாணை வருகிற 26ம் தேதி வெளியாகிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கான பிரசார பயணச் செலவில் தேர்தல் விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அங்கீகாரம் பெறாத கட்சிகளின் தலைவர்கள் 20 பேருக்கும், அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் 40 பேருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, தேர்தல் அறிவிப்பாணை வெளியான நாளில் இருந்து 7 நாட்களுக்குள், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள தலைவர்களின் பெயரை இந்திய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அளிக்கவேண்டும்.
இந்த சலுகை கேட்டு பெயர் கொடுக்கப்பட்ட தலைவர்கள், தேர்தல் பிரசாரத்துக்காக விமானம் மற்றும் வேறு வாகனங்களில் மேற்கொள்ளும் பயணத்துக்கான செலவு எதுவும் அந்தக் கட்சி வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது. அந்த கட்சி தலைவரின் பயணச்செலவு தவிர, வேட்பாளரின் பிரசாரத்துக்காக அந்த கட்சி மேற்கொள்ளும் மற்ற செலவுகள் அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும். மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கான நட்சத்திர பேச்சாளர்களின் பயணத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை என்று லக்கானி தெரிவித்துள்ளார்.