எஸ், விஷால் வேட்புமனு விஷயத்தில் தப்பு நடந்திருக்கு.. ஒப்புக்கொண்டார் லக்கானி!
விஷால் வேட்புமனு விஷயத்தில் தவறு நடந்திருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒப்புக்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: விஷால் வேட்புமனு விஷயத்தில் தவறு நடந்திருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்தார் நடிகர் விஷால். அரசியலுக்கு நிச்சயம் வருவோம் என கூறிய ரஜினி கமல் உள்ளிட்டோர் அமைதிகாக்க விஷாலின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா துறையிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து வேட்பு மனுதாக்கல் செய்த விஷால் விசில், கேரம்போர்டு ஆகிய சின்னங்களை கேட்டிருந்தார். ஆனால் வேட்புமனுவில் அவரது பெயரை முன்மொழிந்த 10 பேரில் 2 பேர் தங்களின் கையெழுத்து இல்லை என பின்வாங்கவே விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி.
புகார் அளித்த விஷால்
ஆளும் கட்சியினர் மிரட்டியதாலேயே தன்னை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதாக கூறிய விஷால் அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். ஆனாலும் வேட்பு மனு ஏற்கப்படாததால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்தார் விஷால்.
எழுத்துமூலம் விளக்கம்
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வேட்புமனுவை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தேர்தல் நடத்தும் அதிகாரி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
விஷால் விஷயத்தில் தவறு
வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து வாய்மொழியாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். விஷால் விஷயத்தில் அந்த நடைமுறையை பின்பற்றப்படவில்லை என்றும் அதில் தவறு நடைபெற்றுள்ளது என்றும் ராஜேஷ் லக்கானி கூறினார்.
இறுதியில் விளக்கம்
முதலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறிய வேலுச்சாமி, அதன் பிறகு நிராகரிக்கப்பட்ட மனு ஏற்கபட்டதாகவும் வாய்மொழியாக கூறியுள்ளார் என்ற அவர் இறுதியில்தான் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
மீண்டும் ஏற்கப்பட்டுள்ளது
இதுகுறித்தும், வேட்புமனு தாக்கல் செய்த போது தேர்தல் பார்வையாளர்கள் இல்லாதது குறித்தும் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவுதான் இறுதியானது என்றும் ராஜேஷ் லக்கானி கூறினார்.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை பின்னர் ஏற்றுக்கொண்டதற்கான முன்னுதாரணங்கள், தமிழகத்தில் பர்கூர் மற்றும் குஜராத்தில் ஒரு தொகுதியிலும் ஏற்கனவே நடந்துள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
24 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கையை ஒட்டி ஆர்.கே. நகர் தொகுதிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுவதா அல்லது சென்னை மாவட்டம் முழுவதும் டாஸ்மாஸ் கடைகளை மூடுவதா என்பது குறித்து மதுவிலக்கு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் நாளில் எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்டம் முழுவதுமே மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்ற அவர் ஆனால் வாக்கு எண்ணும் நாளில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால், அந்தத் தொகுதியில் மட்டும் மதுக்கடைகளை மூடலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.