"கண்ணா! போருக்கு தயாராகுங்கள்"... ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி கட்டளையிடுவார்... தமிழருவிமணியன்
இந்த முறை நடைபெறவுள்ள ரசிகர்கள் சந்திப்பில் போருக்கு தயாராக ரஜினி கட்டளையிடுவார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: இந்த மாத இறுதியில் ரசிகர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தவுள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடையே பேசிய ரஜினி, ஆண்டவன் கட்டளைபடி இன்று நடிகனாக இருக்கிறேன். நாளை நான் என்னவாக ஆக வேண்டும் என்று ஆண்டவன் ஆசைப்படுகிறானோ அதன்படி நான் நடப்பேன் என்றார்.
மேலும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து ரஜினி அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்று தெரியவந்ததை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தமிழருவிமணியன் தலைமையில் மாநாடு
இந்நிலையில் திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழருவி மணியன் தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் ரஜினி அரசியலுக்கு வருவது ஏன் என்பது குறித்தும் அவர் ஏன் வரவேண்டும் என்பது குறித்தும் தமிழருவிமணியன் விளக்கிப் பேசினார். இது ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது.
ரஜினியின் நிலைப்பாடு என்ன
இதனிடையே தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று ரஜினிக்கு அடுத்தாற்போல் கூறிய கமலோ அதிகளவில் அரசியலில் ஈடுபடுகிறார். ஆனால் ரஜினியோ ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியோடு சரி என்றெல்லாம் பேசினர். இது காலா மற்றும் 2.0 படங்களை பிரபலப்படுத்த ரஜினி பயன்படுத்தும் விளம்பர யுத்தி என்றும் கூறினர்.
அரசியல் நடவடிக்கைகள்
ஆனால் உண்மையை சொல்லபோனால் கட்சி சின்னம், கொடி, பெயர் தேர்வு, கட்சியை பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில் ரஜினி மும்முரம் காட்டி தற்போது அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இந்த மாதம் 12-ஆம் தேதி ரஜின பிறந்தநாள் அன்று அறிவிப்பு வரும் என்றும் யூகங்கள் வந்தன.
6 நாள்கள் சந்திப்பு
வரும் 26-ஆம் தேதி முதல் அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் முதல் 31-ஆம் தேதி வரை ரஜினி தனது திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த முறை நிச்சயம் ஏதேனும் அறிவிப்புகள் இருக்கும் என்று ரசிகர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதூகலத்தில் குதித்து வருகின்றனர்.
தமிழருவிமணியன் உறுதி
ரஜினி தனது ரசிகர்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து தமிழருவிமணியன் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பட்டிமன்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தரக்கூடிய வகையில் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலான ரசிகர்கள் சந்திப்பு இருக்கும்.
நிச்சயம் அறிவிப்பு
அந்த 6 நாள்களில் ரஜினிகாந்த் தமிழகத்தின் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்க போகும் செய்தியை அவர் மிக நிச்சயம் அறிவிப்பார். எனவே இனி ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு இடமே இல்லை. இதை என்னால் உறுதியாக கூறமுடியும்.இடைத்தேர்தலை மட்டுமே சந்திக்கக் கூடிய ஒரு வேட்பாளராக ரஜினிகாந்த் தன்னை முன்னிறுத்துகிற மனிதர் இல்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நல்ல ஒரு அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் அவர் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்று கூறியிருந்தார் என்றார் தமிழருவி மணியன்.