என்ன பிரச்சினை?... பழ. கருப்பையாவுக்குப் போனைப் போட்ட ரஜினி!
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் திடீர் தாக்குதலுக்குள்ளான பழ. கருப்பையாவிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்தத் தகவலை பழ. கருப்பையாவே கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் துறைமுகம் தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்து வந்தவர் பழ. கருப்பையா. அதிமுகவுக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாதது போலத்தான் இத்தனை காலமாக இருந்து வந்தார் பழ. கருப்பையா.
அவரை அதிமுகவினர் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவர் சொன்ன எதையும் கேட்டதும் இல்லை.
அதிரடிப் பேச்சு
சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் பழ. கருப்பையாவின் அதிரடிப் பேச்சால் பெரும் பரபரப்பு எழுந்தது. ஆட்சியில் இருப்பவர்களையும், அமைச்சர்களையும் கடுமையாக சாடிப் பேசியிருந்தார் கருப்பையா.
லேட்டாக நீக்கம்
ஆனால் அவர் பேசி சில நாட்களாகியும் கூட கட்சித் தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லை. திடீரென சில நாட்களுக்கு முன்பு அவரை கட்சியை விட்டு நீக்கினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நீக்கிய வேகத்தில் தாக்குதல்
கட்சியை விட்டு நீக்கப்பட்ட நிலையில் திடீரென நள்ளிரவில் கருப்பையாவின் வீடு தாக்குதலுக்குள்ளானது. ஒரு கும்பல் வந்து சரமாரியாக தாக்கிச் சென்றது.
கட்சித் தலைவர்கள் ஆதரவு
இதையடுத்து அவருக்கு பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்கள், வைகோ உள்ளிட்டோர் நேரில் போய்ப் பார்த்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
ரஜினி திடீர் போன்
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென பழ. கருப்பையாவுக்குப் போன் செய்து என்ன நடந்தது என்று கேட்டு கருப்பையாவிடம் பேசியுள்ளார்.
பிரச்சினை குறித்துக் கேட்டார்
இதுகுறித்து கருப்பையா கூறுகையில், என்ன பிரச்சினை, என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். நானும் விவரத்தைச் சொன்னேன். எனக்கு ஆறுதல் தெரிவித்தார் என்றார்.
ரஜினிக்கு சிக்கல் வருமா?
பழ. கருப்பையாவிடம் ரஜினி போனில் பேசி விசாரித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், கருப்பையாவிடம் பேசப் போய் ரஜினி மீது ஆட்சியாளர்களின் கோபம் திரும்பி விடப் போகிறதே என்ற பரபரப்பும் கூடியுள்ளது.