ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது.. நக்கீரன் கருத்துக் கணிப்பில் மக்கள் பொளேர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர். நக்கீரன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நக்கீரன் இதழ், ரஜினிகாந்த் அசியல் பிரவேசம் செய்தால் மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளது. கடந்த 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில், தமிழகத்தின் பல பகுதிகளில் மொத்தம் பத்தாயிரம் பேரை சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளதாக நக்கீரன் தெரிவித்துள்ளது.
அதில் ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, பேச்சின்போது குறிப்பிட்ட சிஸ்டம் கெட்டுவிட்டது என்ற வார்த்தை ஒரு கேள்வியாக முன் வைக்கப்பட்டுள்ளது.
சிஸ்டத்தை மாற்ற முடியுமா
"சினிமாவில் ரஜினி செய்வது போல, நிஜத்திலும் ரஜினியால் அரசியல் சிஸ்டம் மாறுமா? "சிஸ்டம் கெட்டுப் போச்சு எனச் சொல்லும் ரஜினி அதை மாற்றுவாரா?' என நக்கீரன் இதழ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, "ரஜினி சொன்னது மாதிரி அரசியல் சிஸ்டத்தை மாற்றுவார்' என 25 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினியால் முடியாது
ஆனால், 33 சதவிகிதம் பேர் அது பற்றி தெரியாது, என கூறியுள்ளனர். "ரஜினியால் சிஸ்டம் மாறாது' என 42 சதவிகிதம் பேர் உறுதிபட தெரிவித்துள்ளனராம். அதாவது, ரஜினி இந்த சிஸ்டத்தை மாற்றிவிடுவார் என நினைப்போரை விட அவரால் முடியாது என நினைப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கருத்து கூற மறுப்போரும், ரஜினி மீது இன்னும் முழு நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற கணக்கின்கீழ் பார்க்கப்பட வேண்டியவர்கள்.
எதுவானாலும் ஓகே
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தனியாக போட்டியிட வேண்டுமா? அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமா?'என்கிற கேள்விக்கு, அவர் எந்த முடிவெடுத்தாலும் சரி என 39 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
தனித்து ஜெயிப்பார்
38 சதவிகிதம் பேர் "ரஜினி தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார்' என தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினி மீது அவ்வளவு நம்பிக்கை அந்த மக்களுக்கு.