ரஜினி ரசிகர்கள் பதிலடி...மதுரையில் வீரலட்சுமி கொடும்பாவியை எரித்து எட்டி உதைப்பு!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீரலட்சுமியின் கொடும்பாவியை எரித்து மதுரையில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை : நடிகர் ரஜினிகாந்த்தை அரசியல் வரக்கூடாது என சொல்ல வீரலட்சுமி யார் என்று ரசிகர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி தலைமையில் இன்று காலையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை கதீட்ரல் சாலையில் இன்று காலையில் தமிழர் முன்னேற்றப்படையினர் ரஜினிகாந்த்தின் உருவபொம்மையை எரித்ததோடு பட்டாசு வைத்து பீஸ் பீஸாக வெடிக்கச் செய்தனர்.
இதனையடுத்து பேசிய வீரலட்சுமி ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, தமிழகத்தை சாராத ஒருவர் அரசியலுக்கு வருவதை ஏற்க முடியாது என்றும் கூறினார். இதனால் தடையை மீறி போராடிய தமிழர் முன்னேற்றப் படையை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தமிழர் முன்னேற்றப் படையை சேர்ந்த வீரலட்சுமியின் உருவபொம்மையை எரித்து ரஜினி ரசிகர்கள் கொழுந்துவிட்டு எரிந்த உருவபொம்மையை எட்டி உதைத்தனர். எங்கள் தலைவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்ல வீரலட்சுமி யார் என்றும் அவர்கள் அப்போது முழக்கமிட்டனர்.
சுமார் 20க்கும்மேற்பட்ட ரசிகர்கள் இந்த உருவபொம்மை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கைகளில் ஊதா, வெள்ளை, சிவப்பு நிற கொடியின் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டு அதில் ரஜினியின் படம் இடம் பெற்றிருந்தது. இது ரஜினி ரசிகர் மன்றக் கொடி என்று சொல்லப்படுகிறது.
தடையை மீறி உருவபொம்மையை எரித்த 20க்கும மேற்பட்ட ரஜினி ரசிகர்களை மதுரை திடீர் நகர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் உருவபொம்மை எரிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க அதனை போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.