திருவொற்றியூர் டூ பாரிமுனை வரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் இயக்கிய இலவச வேன்
திருவொற்றியூரிலிருந்து பாரிமுனை வரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் இலவச வேனை இயக்கினர்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அடுத்து திருவொற்றியூரிலிருந்து பாரிமுனை வரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் இலவசமாக வேனை இயக்கினர்.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் கடந்த 8 நாட்களாக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மேலும் ஷேர் ஆட்டோக்கள், தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளையால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் திருவொற்றியூர் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஒரு வேனை நாள் வாடகைக்கு அமர்த்தி இன்று மட்டும் திருவொற்றியூரிலிருந்து பாரிமுனை வரை
இலவசமாக செல்ல ஏற்பாடு செய்தனர்.
இலவசமாக இல்லாவிட்டாலும் கட்டண முறையில் தனியார் அமைப்புகள் பாதுகாப்பான பயணத்துக்கு வாகனங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.