வினியோகஸ்தர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்: நெல்லை ரஜினி ரசிகர்மன்ற தலைவர் எச்சரிக்கை
நெல்லை: அனைத்து ரசிகர்மன்றங்களையும் ஒருங்கிணைத்து வினியோகஸ்தர்கள் மற்றும், தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று திருநெல்வேலி மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற தலைவர் பானுசேகர் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியான 'லிங்கா' திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அப்படத்தின் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற தலைவர் பானுசேகர். அவர் கூறியதாவது:
லிங்கா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் எந்தவிதத்திலும் இழப்பை ஏற்படுத்தவில்லை. லிங்கா படம் வெளிவந்த நாளில் 6 காட்சிகள் திரையிடப்பட்டன. ஒரு டிக்கெட்டை 400 ரூபாய் வரை விலை நிர்ணயித்து விற்பனை செய்தார்கள். தற்போது வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
முதலீடு செய்த பணத்தை எடுத்துவிட்ட போதிலும் கூடுதல் லாபத்தை எதிர்பார்த்தார்கள், ஆனால் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் திரையரங்குக்கு வருபவர்களின் வருகை குறைந்து அதிக லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்கிற உண்மை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனாலும், தனிப்பட்ட விதத்தில் ரஜினியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சிலரது தூண்டுதலின் பேரில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, சில நடிகர்களின் ரசிகர்களும், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது இதே பிரச்னைக்காக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இதே போக்கினை கடைபிடித் தால், அனைத்து ரசிகர்மன்றங்களையும் ஒருங்கிணைத்து பெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். இவ்வாறு பானு சேகர் தெரிவித்தார்.