நேற்று "புத்தாண்டு பரிசு" இன்று புத்தாண்டு வாழ்த்து... போயஸ் கார்டனில் ரசிகர்களை சந்தித்த ரஜினி
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்ட ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்ட ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துகளை கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், அவர் நிச்சயம் வருவார் என்று 20 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 2-ஆவது முறையாக கடந்த 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது நேற்றைய தினம் கடைசி நாளில் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் சட்டசபை தேர்தலின்போது தனிக்கட்சி தொடங்குவதாகவும் அவர் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இதை ரஜினி தங்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகவே கருதுகின்றனர்.
நேற்றைய தினம் ரஜினி அறிவித்த இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று கருதுகின்றனர். அரசியலுக்கு வரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து நேற்று டுவிட்டரில் நன்றி கூறிய ரஜினி, தனது புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறியிருந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் ஆங்கில, தமிழ் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகைகளில் ரசிகர்கள் ரஜினியை சந்திக்க போயஸ் தோட்டத்துக்கு வருவர். அப்போது அவர் சென்னையில் இருந்தால் ரசிகர்களை சந்தித்து வாழ்த்துவார்.
அதுபோல் இன்று புத்தாண்டு தினத்தில் தலைவரின் வாழ்த்துகளை பெற வேண்டும் என ரசிகர்கள் அவரது இல்லத்துக்கு முன்னர் கூடினர். இதை அறிந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார். ஏற்கெனவே அவரது அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் இன்னும் ஆரவாரம் அடைந்தனர்.