கபாலி டிக்கெட்டுகளை அள்ளிய கார்பரேட் நிறுவனங்கள்: கடும் கோபத்தில் ரசிகர்கள்
சென்னை: கபாலி பட டிக்கெட்டுகளை கார்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக வாங்கியதால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது. ரஜினி படம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு கொண்டாட்டம் தான். ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசிப்பதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்.
இம்முறை விளம்பரம் மற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் விடுமுறை அறிவித்த சில கார்பரேட் நிறுவனங்கள் பட டிக்கெட்டுகளையும் மொத்தமாக வாங்கிவிட்டன. இதனால் வழக்கமாக ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காணும் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
டிக்கெட் கிடைக்காத விரக்தியில் ரசிகர்கள் சென்னை காசி தியேட்டரில் தாங்கள் வைத்திருந்த கட்அவுட்டுகள் மற்றும் பேனர்களை எடுத்துச் சென்றுவிட்டனர். அடித்தட்டு மக்கள் நள்ளிரவு தியேட்டர்களுக்கு வந்து காத்துக் கிடந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை.
மேலும் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இம்முறை தியேட்டர்களில் ரசிகர்களுக்கு கெடுபிடி உள்ளது. பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க தியேட்டர் நிர்வாகமும்,போலீசாரும் கெடுபிடி செய்ததால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
இது தான் தியேட்டருக்கு வெளியே உள்ள நிலவரம்.