ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு: சுப.உதயகுமார், நாஞ்சில் சம்பத்தை தாக்க ரசிகர்கள் முயற்சித்ததால் பரபரப்பு!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்த சுப. உதயகுமார், நாஞ்சில் சம்பத்தை ரசிகர்கள் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்த அதிமுகவின் நாஞ்சில் சம்பத், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் சுப. உதயகுமார் ஆகியோரை ரசிகர்கள் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வரப் போவதாக அண்மையில் ரசிகர்களிடையே பேசும்போது கோடிட்டுக் காட்டினார். அத்துடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
தற்போது டிவி சேனல்களிலும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகின்றன. தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டது.
தாக்க முயற்சி
இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் சுப. உதயகுமார், அதிமுகவின் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ரஜினிகாந்தை விமர்சித்தனர். இந்த விமர்சனங்களால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் இருவரையும் தாக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடந்தது என்ன?
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சுப. உதயகுமார் பதிவிட்டுள்ளதாவது: நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது என்று வாதிட்டேன். ரஜினி ரசிகர்கள் சிலரும், ஆர்யத்துவக் கூட்டத்தினர் பலரும் அடிப்பதற்கு மேடையை நோக்கிப் பாய்ந்தனர்.
அதிர்ச்சி
மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தனர். கூச்சலிட்டு பேச விடாமல் தடுத்தனர். இவர்கள் அரசியலுக்கு வந்தால், தமிழகம் என்னவாகும் என்பதை நடுநிலையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவலம் உறுதி
திரு. பாண்டே வருத்தம் தெரிவித்தார். திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போதும் மிக அநாகரிகமாக நடந்துகொண்டது இந்த பா.ஜ.க. B-டீம். ரஜினியின் ஆண்டவன் ஒரு வழியாகப் பேசி, இவர் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு பெரும் அவலத்தை சந்திக்கும் என்பது உறுதி.