ரஜினி படிக்காதவரா.. சு. சுவாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால்.. அர்ஜுன் சம்பத் ‘வார்னிங்’
நடிகர் ரஜினி காந்த் படிக்காதவர் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினி மீது தொடர்ந்து அவதூறு பரப்பினால் வழக்கு தொடர்வேன் என்று சுப்பிரமணியன் சுவாமியை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் எச்சரித்துள்ளார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல கருத்துக்களை கூறிவருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று முதலில் கூறினார். மேலும், ரஜினிகாந்த் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்று சு. சுவாமி குற்றம்சாட்டினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ரஜினி படிக்காதவர்
இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் படிப்பறிவு இல்லாதவர் என்றும் அவர் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்துக்கு ரஜினி ரசிகர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சு. சுவாமி மன்னிப்பு கேட்க..
சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினி பற்றி சு. சுவாமி அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும், இந்தக் கருத்தைத் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் எச்சரித்துள்ளார்.
அவதுறு வழக்கு
சு. சுவாமி ரஜினியிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் திராவிட அரசியலை வீழ்த்த ரஜினியால் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி அர்ஜுன் சம்பத் சந்திப்பு
முன்னதாக, கடந்த வாரம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு அர்ஜுன் சம்பத் சென்றார். அப்போது, அரசியலுக்கு வருவது குறித்து ரஜினியிடம் அவர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.