ரஜினிகாந்த் பற்றி கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான்.. ஆமோதிக்கும் மக்கள்
Recommended Video
சென்னை: காவிரி உள்பட பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார் என்று கமல்ஹாசன் கூறியது உண்மைதான் என்று நமது வாசகர்கள் ஆன்லைன் வாக்களிப்பு ஒன்றில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், தற்போது இமயமலையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆன்மீக பயணம் கிளம்பும் முன்பாக சென்னை ஏர்போர்ட்டில் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆனால், தமிழத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கவில்லை.
நழுவும் ரஜினிகாந்த்
இதனிடையே சமீபத்தில் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அப்போது, காவிரி விவகாரம் மட்டுமல்ல பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ரஜினி நழுவுகிறார் என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்தார். ரஜினிகாந்த்தும் தானும் நண்பர்கள் என வெளிப்படையாக அறிவித்த கமல்ஹாசன், மோசமான விமர்சனங்களை தவிர்த்து இருவருமே அரசியல் செய்யப்போவதாக கூறியிருந்தார்.
முதல்முறை பகிரங்க குற்றச்சாட்டு
இந்த நிலையில், ரஜினிகாந்த் பற்றி முதல்முறையாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியதால், அது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதமாக மாறியது. ரஜினிகாந்த், பெண்கள் பாதுகாப்பு பற்றி கருத்து கூறாமல் கிளம்பியது ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை பெற்ற நிலையில், கமல்ஹாசன் கருத்தும் அதில் இணைந்து விவாதத்தை தீவிரப்படுத்தியது.
கருத்து கணிப்பு
இதுகுறித்து 'ஒன்இந்தியாதமிழ்' தளத்தில் ஒரு சர்வே நடத்தினோம். காவிரி உள்ளிட்ட விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்: கமல் என்ற கேள்விக்கு, உண்மைதான் மற்றும் இல்லை, தவறாக சொல்கிறார் என்றும் இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. இதில் வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பதிவு செய்தனர்.
பெருவாரியான மக்கள் ஆமோதிப்பு
உண்மைதான் என்று வாக்களித்ததில் 90.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், இல்லை, தவறாக சொல்கிறார் என கருத்து தெரிவித்தது 9.2 சதவீதம் பேர் மட்டுமே. இதில் இருந்து ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களுக்கும் கருத்து கூறாமல் நழுவுகிறார் என்ற விமர்சனத்தை பெரும்பாலான வாசகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இமயமலையில் இருந்து திரும்பிய பிறகாவது, ரஜினிகாந்த் இந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு செயல்படுவாரா என்பதை வருங்காலங்களில் கவனிக்க வேண்டியதுதான்.