உன் வாழ்க்கை உன் கையில்... ரஜினி வாழ்க்கை மட்டும் கடவுள் கையில்..ரசிகர்களுக்கு புரியுமா?
உன் வாழ்க்கை உன் கையில் என்று வசனம் பேசிய ரஜினிகாந்த் இன்று கடவுள் என்ன தீர்மானிக்கிறாரோ அதன்படி தான் இயங்குவதாக கூறியுள்ளார்.
சென்னை: உன் வாழ்க்கை உன் கையில் என்று பாட்ஷா படத்தில் பஞ்ச் கூறிய ரஜினிகாந்த் தம் வாழ்க்கையோ கடவுள் கையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கரூர், திண்டுக்கல், குமரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். 600-க்கும் மேற்பட்டவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பானது 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பான் அட்டையுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ரஜினியின் ஆன்மிக கருத்து
இந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், நான் என்வாக வேண்டும் என்பது ஆண்டவன்தான் தீர்மானிக்கிறார். என் வாழ்க்கை ஆண்டவன் கையில்தான் உள்ளது. நான் ஒரு கருவிதான். என்னை இன்று நடிகனாக ஆண்டவன் பயன்படுத்திக் கொண்டார்.
நாளை என்னவோ
நாளை நான் என்னவாக வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ. அதுபடி நான் நடப்பேன். ஆண்டவனின் விருப்பப்படி மக்களை மகிழ்விக்கும் பணியை செய்து வருகிறேன். நாளை நான் என்னவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறாரோ அதன்படி நடப்பேன்.
அந்த மாதிரி ஆள்கள் வேண்டாம்
எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை தூய்மையாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், மனசாட்சிபடியும் செய்து முடிப்பேன். கடவுளிடம் மனதையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தால் அந்த மாதிரி ஆள்களை அண்ட விட மாட்டேன் என்றார் ரஜினி.
பாட்ஷா பஞ்ச்
பாட்ஷா படத்தில் உன் வாழ்க்கை உன் கையில் என்று ரஜினி கூறியிருப்பார். ஆனால் இன்று ரஜினியின் வாழ்க்கையோ கடவுளின் கையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் எந்த ஒரு முடிவையும் கடவுளின் தீர்மானத்தின்படி நிறைவேற்றுவார் என்று தெரிகிறது.
ஆண்டவன் சொல்றான்...
அருணாசலம் படத்தில் ஒரு பஞ்ச் பேசுவார். அதில் ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான் என்பார். அதுபடி அவரது அரசியல் பிரவேசமும் ஆண்டவன் சொல்றான் இந்த அருணாசலம் கேக்குறான் என்ற பாணியில் இருக்கும்போல.