காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதிக்கு பிறகு ரஜினிதான்.. அடேங்கப்பா ரசிகர்கள்!
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தை ஆளும் தகுதி ரஜினிகாந்துக்கு மட்டுமே உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை: அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய தலைவர்களுக்கு பிறகு மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த்தை சந்திப்பதற்காக தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் நிறைய ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக அந்த சந்திப்பு தேதிகளை ரஜினியே ரத்து செய்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த ரசிகர்களை மே 15-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பார்கோடுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட ரசிகர்கள் மட்டுமே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் உற்சாகம்
கரூர், திண்டுக்கல், குமரி மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்தார். அப்போது அவர் அரசியல் குறித்து பேசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ரஜினிக்கு மட்டுமே
இந்த சந்திப்பு குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்ததில் மகிழ்ச்சி. அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு அடுத்து தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் ரஜினி மட்டும்தான்.
ரஜினிக்காக 30 ஆண்டுகளாக...
மேற்கண்ட தலைவர்களுக்கு அடுத்து தமிழகத்தை ஆளும் தகுதி படைத்த ஒரே தலைவர் ரஜினிகாந்த்தான். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 30 ஆண்டுகளாக காத்திருந்தோம். தற்போது கடவுள் தீர்மானித்தால் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறியதில் மகிழ்ச்சி.
மக்கள் சக்தி
அவருக்கு இருக்கும் மக்கள் சக்தி வேறு யாருக்கும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய அவரை விட்டால் யாரும் இல்லை. மக்களும் மற்றவர்களை நம்பமாட்டார்கள்.
நல்ல எண்ணம், குணம், மனிதாபிமானம், இரக்க குணம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் அவர் மக்களுக்கு நல்லது செய்வார்.
ரஜினியின் அறிவுரை
குடிபழக்கம், புகைப்பழக்கத்தை விடும்படி அவர் எங்களை அறிவுறுத்தியுள்ளார். சுய புத்தி, சுய தொழில் கொண்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நல்ல மனம் படைத்தவர்கள், பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தலைமையேற்க வாங்க தலைவா
இன்று ரேஷன் கடைக்கு சென்றால் பொருள்கள் இல்லை. அனைத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அவர் தமிழகத்துக்கு தலைமை ஏற்றால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.