'அரசியலுக்கு வர நேர்ந்தால்....' ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து குழம்பியுள்ளாரா?: வீடியோ
அரசியலுக்கு வர நேர்ந்தால் அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன் என செய்தியாளர்களிடம் ரஜினி கூறியுள்ளார். இது அவர் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் குழப்பத்தில் உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னை: அரசியலுக்கு வர நேர்ந்தால் அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஜினி கடந்த மாதம் தன் ரசிகர்களை மாவட்டவாரியாக சந்திக்கும் கூட்டத்தில் 'போர் வரட்டும் அப்போது பார்க்கலாம்' என தன் அரசியல் பிரவேசம் குறித்து கூறினார்.
1996ல் தொலைக்காட்சியில் தோன்றி, ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அன்றிலிருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறார், இல்லை என 21 வருடமாக அவரது ரசிகர்களும் ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் ரஜினி இதுவரை நான் அரசியலுக்கு வருவேன் என உறுதியாகச் சொல்லவில்லை.
மேலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் அவரிடம் சென்னை விமான நிலையத்தில் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அரசியலுக்கு வர நேர்ந்தால் அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என தீர்க்கமற்ற பதிலை கூறியுள்ளார்.
ஆனால், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவார். தனிக்கட்சி தொடங்குவார் என கருத்துக் கூறிக்கொண்டே உள்ளனர்.