ரசிகர்களை சந்தித்த ரஜினி.. அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்கவே 6 நாட்கள் சஸ்பென்ஸ்!
கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு துவங்கியுள்ளது. இன்றுமுதல் 31ஆம் தேதிவரை ரசிகர்களை சந்திக்கும் அவர் அரசியல் பிரவேசம் பற்றி 31ஆம் தேதி அறிவிப்பேன்
Recommended Video
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் சந்தித்து வருகிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. 31ஆம் தேதிதான் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2வது கட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை சமீபத்தில் அவரது தலைமை ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவித்தார்.
இன்று தொடங்கியுள்ள இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது.
ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு
காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். நாளை திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்கள், 28-ம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்கள், 29ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்கள், 30, 31 தேதிகளில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
ரசிகர்களுக்கு அடையாள அட்டை
இதில் பங்கேற்க ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் வரிசையாக வந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். ஒரு நிமிடம் கூட ரசிகர்கள் நின்று பார்க்க முடியவில்லை. இந்த சந்திப்பே ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கடந்த முறை உட்கார்ந்து போட்டோ எடுத்த ரஜினி இம்முறை நின்று கொண்டே புகைப்படம் எடுத்தார்.
அரசியல் பிரவேசம்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவரோ இதோ அதோ என்று கூறி வருகிறார். போர் வரும் போது பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் போர் என்றாலே அது தேர்தல்தானா என்று கேட்டுள்ளார் ரஜினி.
ஊடகங்கள் எதிர்பார்ப்பு
அரசியலில் ஜெயிக்க வீரம் மட்டுமல்ல வியூகமும் முக்கியம் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி டிசம்பர் 31ஆம் தேதியன்று அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். ரசிகர்களும், மக்களும் எதிர்பார்க்கிறார்களோ இல்லையே, ஊடகங்கள் அதிகம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போ ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தெரிந்து கொள்ள 6 நாட்கள் காத்திருக்க வேண்டும். 20 ஆண்டுகள் காத்திருக்கும் ரசிகர்கள் 6 நாட்கள் காத்திருக்க மாட்டார்களா என்ன?